×

நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

 

நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என்பவரிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தாதாகவும், இந்த தொகையை திருப்பி தரவில்லை என்றால் ரஜினி தருவார் என கஸ்தூரி ராஜா, முகுந்த் சந்த் போத்ராவுக்கு கடிதம் அனுப்பியிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி போத்ரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , பெயரை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர் தான் வழக்கு தொடர வேண்டுமே தவிர நீதிமன்றம் உத்தரவிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.  தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முகுந்த்சந்த் போத்ரா மரணமடைந்துவிட்டதால் அவரது மகன் ககன்போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் துரைசாமி, தமிழ்செல்வி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின்போது, கஸ்தூரிராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி,ரஜினி தருவார் என்ற கடிதமே போலியானது என்றும், எந்த வித  பணமும் தரவேண்டியது இல்லை என வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையின் போது தொடர்ந்து மனுதாரர் மூன்று முறைக்கு மேல் ஆஜராகவில்லை என்றும் வழக்கை நடத்துவதில் ஆர்வம் காட்டாமல் இழுத்தடித்து நிலுவையில் வைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.