×

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவிக்க தடை - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறான கருத்துக்களையோ, உண்மைக்கு புறம்பான ஆதாரமில்லாத கருத்துக்களையோ தெரிவிக்கக்கூடாது என்று அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அப்போது, நெடுஞ்சாலைத் துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் கடந்த ஜூலை மாதம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைத்தளங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்த செய்திகள் மற்றும் தகவல்களை பதிவிட்டிருந்தது. இதையடுத்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் உசேன் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்தார்.

 ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு தரக்கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டுவது தவறு என்றும் இது தொடர்பாக நான் எந்தவித டெண்டரிலும் கலந்து கொள்ளவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமி மீது புகாரளித்ததாகவும் அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரைத் தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் அறப்போர் இயக்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ள வழக்கில் முகாந்தரம் இருப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறான கருத்துக்களையோ, உண்மைக்கு புறம்பான ஆதாரமில்லாத கருத்துக்களையோ தெரிவிக்கக்கூடாது என்று அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.