×

டெண்டர் முறைகேடு வழக்கு- எஸ்பி வேலுமணி வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது: தமிழக அரசு

 

முன்னாள் அமைச்சர் வேலுமணி டெண்டர் விதிகளை அப்பட்டமாக மீறி உறவினர் மற்றும் நண்பர்களுக்கு டெண்டர்களை வழங்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, வேலுமணி சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.தொடர்ந்து வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையை புறக்கணிக்க அரசு முடிவெடுத்துள்ளது, விசாரணை நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை போன்றது எனத் தெரிவித்துள்ளனர்.

புகார்தாரர்கள் தெரிவித்த 14 குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்ற ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை மீறி வழக்குப்பதிவு செய்ததற்கான காரணம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு ஏற்கனவே வந்தபோது  அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் வேலுமணி மீது பதிவான இரு வழக்குகளை எதிர்த்து தனி நீதிபதி முன்பாகத்தான் வழக்கு தொடர்ந்து வாதிட வேண்டுமென்றும் என்று வாதிட்டார்.
 
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்  ராஜூ ,வேலுமணி சார்பில் ஆஜராகி வாதிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய கூட்டாளி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியுள்ளது எனவே வருமானவரித் துறை சம்பந்தப்பட்டிருப்பதால்  அவர் ஆஜராக கூடாது எனவும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை  மத்திய அரசுக்கு அவருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து  கூடுதல் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் தனி நீதிபதி முன்புதான் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் ஒரு சிலருக்கு குறைந்த விலையில் டெண்டரும்,ஒரு சிலருக்கு அதிக விலையில் டெண்டரும் வழங்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாலே வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். வேலுமணி அமைச்சராக இருந்தபோது, டெண்டர் தொடர்பாக அனைத்து நிர்வாக ரீதியான முடிவுகளை எடுத்து,உறவினர் மற்றும் உடனிருந்தவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டதாகவும், டெண்டர் வழக்கியதில் அனைத்து விதிகளும் அப்பட்டமாக மீறப்பட்டதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா வாதிட்டார். தன் பதவியை தவறாக பயன்படுத்தி இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் ,மத்திய தணிக்கை அறிக்கையிலும் முறைகேடு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்.
 
வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எஸ்.ராஜூ,சுரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும்,உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் வாதிட்டனர். டெண்டர் ஒதுக்கியதில் எந்த ஊழலும் முறைகேடும் நடைபெற வில்லை என்றும் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசின் எதிர்ப்பு குறித்து உரிய உத்தரவு நாளை மறுதினம் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.