×

அதிமுக அலுவலகத்திற்கு சீல் : ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!!

 

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை  அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.  இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும்,  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது . அத்துடன் 14 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில்  அலுவலகத்தில் நடந்த வன்முறையை தொடர்ந்து சட்ட முழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்திற்கு வருவாய் துறை சீல் வைத்தது . அத்துடன் இது தொடர்பாக வருகிற 27ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரியும் உத்தரவை  ரத்து செய்து அலுவலகத்தை ஒப்படைக்க கோரி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வமும் சீல் வைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.  அந்த மனுவில் அவர் எதிர்மனுதாரராக எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.  வழக்கு பட்டியலில் 82 மற்றும் 83 வழக்குகளாக இவை பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வருகிறது.