×

மணல் கடத்தல்- திமுக எம்.பி. மகன் மீது வழக்குப்பதிவு

 

நெல்லையில் குவாரி மணல் கடத்தல் தொடர்பாக நெல்லை திமுக எம்பி ஞான திரவியத்தின் மகன் தினகரன் மீது கனிமவளத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரவணன் என்பவர் அண்மையில் பொறுப்பேற்றார். அவரது வருகைக்கு பின் மாவட்டம் முழுவதும் கனிம வளம் கடத்தல் மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் லாரிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். அவரது உத்தரவின்பேரில், போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளும் தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் நாகர்கோவில் உவரி செல்லும் சாலையில் விஸ்வநாதபுரம் ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அந்தவழியாக வந்த லாரிகளை மடக்கி சோதனை செய்ததில், சட்டவிரோதமாக கிரசர் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த லாரிகள் நெல்லை ஆவரை குளத்தை சேர்ந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தினகரன் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.