×

மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து பெண்களை கற்பழித்த போலீசாரை பணிநீக்கம் செய்ய உத்தரவிடமுடியாது- ஐகோர்ட்

 

மது போதையில் மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரு போலீசாரை பணி நீக்க உத்தரவில்  தலையிட முடியாது  என சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவிட்டது.

சென்னை விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த தனியார் மகளிர் விடுதிக்கு, கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் ராஜா மற்றும் குமரேசன் ஆகிய இருவரும், மதுபோதையில் சென்று, அங்கிருந்த இரு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு பெண்களும் அளித்த புகாரின் அடிப்படையில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை நடத்தினார். பின்னர்,  துறை ரீதியான விசாரணைக்குப் பின், இரு போலீசாரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை மேல் முறையீட்டு அதிகாரியான மாநகர காவல் ஆணையரும் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தார்.  இதை எதிர்த்து இரு போலீசாரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, இரு போலீசாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதாலும், புகார் அளித்த இரு பெண்களிடமும் விசாரணை நடத்தப்படவில்லை என்பதாலும், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. புகார்தாரர்களை உதவி ஆணையர் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண ஆதாரங்களைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என எந்த சூழ்நிலையிலும் கருத முடியாது எனவும், விசாரணை விதிகளும், இயற்கை நீதியும் முறையாக பின்பற்றப்பட்டு பிறப்பிக்கப்பட்ட பணிநீக்க உத்தரவு சரி தான்  எனவும், இரு போலீசாரும் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் கூறி, இரு போலீசாரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.