×

அதிமுக அலுவலகத்தில் திருடு போன விவகாரம்- சிபிஐ விசாரிக்கக்கோரி சிவி சண்முகம் மனு

 

அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கை உடனடியாக  சிபிஐக்கு மாற்றக்கோரி சி.வி சண்முகம் டிஜிபி அலுவலகத்திற்கு தபால் மூலமாக புகார் அளித்துள்ளார்.

கடந்த 11ஆம் தேதி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், இருப்பு தொகை, பத்திரங்கள் ஆகியவற்றை ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருடி சென்றதாக சிவி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போல இ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமை கழக பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு பொய் புகார் அளித்திருப்பதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகரன் மறுப்பு புகார் அளித்தார்.

இந்த நிலையில் ராயப்பேட்டை காவல் நிலைய போலீசார் எந்த வித நடவடிக்கை எடுக்காததால், உடனடியாக இந்த வழக்கை  சிபி ஐ அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தபால் மூலமாக எம்.பி சிவி சண்முகம் புகார் அளித்துள்ளார். குறிப்பாக இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் வரும்போது காவல்துறையில் உரிய பாதுகாப்பு அளித்து இருந்தால் இந்த போன்ற கலவர சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம் என்றும், ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் அத்து மீறி உள்ளே நுழைந்துள்ளார்கள் என நீதிபதி சுட்டிக்காட்டியதை புகார் மனுவில் குறிப்பிட்டு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற சிவி சண்முகம் தரப்பில் மனு அளித்துள்ளனர்.