×

அதிமுக அலுவலகத்தில் இருந்த கூட்டணி கட்சிகளுடன் போடப்பட்ட ஒப்பந்த ஆவணங்களை காணவில்லை

 

அதிமுக அலுவலகத்தில் கடந்த மாதம் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினரை முழுமையாக அடித்து வெளியேற்றி, அலுவலகத்தை கைப்பற்றிய ஓபிஎஸ் தரப்பினர் அலுவலகத்தில் வைத்திருந்த கட்சியின் பொருட்கள் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்றுவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்ட பின், அலுவலகத்தின் கணக்கு அறை உட்பட முழுமையாக ஆய்வு மேற்கொண்டு காணாமல் போன பொருட்கள் குறித்து பட்டியல் தயார் செய்யப்பட்டு உரிய வீடிய ஆதாரங்களுடன், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சிவி சண்முகம் ஜனாயகத்தின் மற்றும் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளார். 

அதில், அதிமுக அலுவலக கணக்கு அறையில் பியூரோவை உடைத்து ஆவணங்கள், அதிமுக தலைமை அலுவலகத்தின்  அசல் பத்திரம், அண்ணா சாலையில் உள்ள காலி இடத்தின் அசல் பத்திரம், கோவையில் உள்ள இதய தெய்வம் மாளிகையின் அசல் பத்திரம், புதுவை மாநில கட்சி அலுவலக இடத்திற்கான அசல் பத்திரம், திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தின் பத்திரம், பேரறிஞர் அண்ணா அறக்கட்டளையின் பத்திரம், நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா மாளிகை அறக்கட்டளையின் அசல் பத்திரம், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்ககவசம் வங்கியில் வைத்திருப்பதன் அசல் ஆவணங்கள், பீரோவில் இருந்த 31ஆயிரம் ரொக்கம், 2 கம்ப்யூட்டர்களின் சிபியு, கட்சியின் கார்கள், வேன்கள் உட்பட 37 மோட்டார் வாகனங்களின் ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைக்கான வவுச்சர்கள், வருமான வரி தொடர்பான ஆவணங்கள், தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட கட்சியின் ஆவணங்கள், கட்சியின் வரவு செலவு கோப்புகள், தேர்தல் விருப்பமனு கட்டணங்களுக்கான ரசீதுகள், கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதற்கான கடிதங்கள், சிபாரிசு கடிதங்கள், கூட்டணி கட்சிகளுடன் போடப்பட்ட ஒப்பந்த ஆவணங்கள், அனைத்து அறைகளின் அசல் சாவிகள், கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள், கட்சிக்கு அன்பளிப்பாக வந்த சிறு பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து மீண்டு தர வேண்டும் என சிவி. சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.