×

அதிமுக அலுவலகத்திலே தான் வெள்ளி வாள் இருக்கிறது  - சிபிசிஐடி தகவல்.. 

 

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து வெள்ளி வாள் திருடப்பட்டுள்ளதாக  முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்த வேல் அலுவலகத்தில் தான் இருப்பதாக  சிபிசிஐடி தெரிவித்திருக்கிறது.  

 சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு நடைபெறும் அதே வேளையில்  ஓபிஎஸ், தனது  ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். இதனால் அங்கு  ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதனையடுத்து  வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர்.  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இருதரப்பும் நீதிமன்றத்தை நாடின. பின்னர் அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றுமாறும், அதன் சாவியை பழனிசாமியிடம் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  

 இதனையடுத்து  சி.வி. சண்முகம் ,  அதிமுக பிரமுகர்கள் தலைமை அலுவலகத்திற்குள் சென்று பார்த்தார்.  பின்னர் செய்தியாளர்கைச் சந்தித்த அவர்  அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்த வெள்ளி வாள் மற்றும் செங்கோல்கள் உள்ளிட்டவை திருடு போயுள்ளதாக  குற்றம் சாட்டினார்.  இந்த நிலையில் இன்று அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது  தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 8 மணி முதல்  சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசாரும்,  தடையவியல் நிபுணர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.   அதிமுக அலுவலகத்தில் என்ன மாதிரியான பொருட்கள் சேதம் அடைந்தது,  மேலும் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

அதில் அதிமுக அலுவலகத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட வெள்ளி வாள்,   அலுவலகத்திலேயே இருப்பதாக  அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அலுவலகத்தில் மேசைகள்,  கதவுகள், சிதறிக்கிடக்கும் காகிதங்கள் என சிறிய சிறிய சேதங்களை கூட அவர் ஆய்வு செய்கின்றனர்.  அத்துடன் என்ன மாதிரியான ஆவணங்கள் திருடு போயுள்ளது, அதிமுக அலுவலர் என்ன மாதிரியான புகார் கொடுத்தார், எஃப் ஐ ஆர் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரணைசெய்து வருகின்றனர்.  ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வு முடிவடைந்த பிறகு  சிபிசிஐடி,  தடயவியல் துறையினர், பொதுப்பணி துறை என மூன்று குழுக்களின்  ஆய்வு அறிக்கைகளும்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.