×

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி மனுத்தாக்கல்

 

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான  வழக்கை ரத்து செய்ததை திரும்ப பெற வேண்டும் என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு புகார்கள் கொடுக்கப்பட்டது. இந்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில்  கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது சிவசங்கர் பாபா தரப்பில், மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக தன் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளதால்,  தன் மீதான புகாரை விசாரிக்க சட்டப்பிரிவில் இடமில்லை என  வாதிடப்பட்டது. ஆனால், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்றுக் கொள்ளக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், சட்டப்படியான தடை உள்ளதாகவும் கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.இந்தநிலையில் ரத்து உத்தரவை திரும்ப பெறவேண்டு என்று சிபிசிஐடி போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்  புகார்தாரரின் விளக்கத்தை கேட்காமல் சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தார்.