×

#Breaking : நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டினால் ரூ.1,100 அபராதம் - சென்னை போக்குவரத்து காவல்துறை .. 

 

நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டினால் ரூ. 1,100 அபராதம்   வசூலிக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் நேற்று ஒரே நாளில்  நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டிய 1, 300 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும்,  விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கும்,  போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்துவதற்கும் தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.  அதன்படி  தவறான பதிவு எண்கள் வைத்திருப்பது,  நோ என்ட்ரியில்  வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் இருப்பது,  லைசென்ஸ் வைத்திராமல் இருப்பது போன்ற  போக்குவரத்து விதி மீறல்  செயல்களுக்கு அபராதங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது நோ என்ட்ரியில்  செல்லும் நபர்களுக்கு என்று தனியாக நேற்று சென்னை மாநகர் முழுவதும் சிறப்பு நடவடிக்கை  போக்குவரத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்டது.  

அதில் ஒரு பகுதியாக நோ என்ட்ரியில் பயணிக்கும் நபர்களுக்கு  அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  பொதுவாக நோ என்ட்ரியில் செல்லும் வாகனங்களுக்கு 100 ரூபாய் அபராதம் என்பதுதான் விதிக்கப்படும். ஆனால் தற்போது  நோ என்ட்ரி பயணத்திற்கு  100 ரூபாயும், ஆபத்து விளைவிக்கும் பயணத்திற்கு 1000  ரூபாயும் என மொத்தம் ரூ. 1,100 ஆக அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நோ என்ட்ரியில் செல்வதால் ஏராளமான  விபத்துக்கள் மற்றும் விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது.  ஆகையால் அபராதத்தை அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சென்னையில்  தவறான ( நோ என்ட்ரி) சாலையில் சென்றதற்காக 1,300 வாகன ஓட்டுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவர்களிடமிருந்து  அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.  மேலும் தொடர்ந்து இதேபோல்   நோ என்ட்ரியில் பயணம்  செய்யும் வாகன ஓட்டிகளிடம்  அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்  மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.