×

“எங்களிடம் மோதினால் விளைவுகள் மோசமாக இருக்கும்”... செய்தியாளர்களை மிரட்டும் பாஜக

 

பாஜகவை பகைத்து கொள்ள வேண்டாம், அப்படி பகைத்து கொண்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் பாஜகவின் சேலம் மாவட்ட பொது செயலாளர் இன்ப சரவணன் செய்தியாளர்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, செய்தியாளர்களை தரக்குறைவாக பேசி அவர்களை விமர்சித்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலம் மாவட்ட பாஜக பொது செயலாளர்  சரவணன், செய்தியாளர்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது, பேசிய பாஜக மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன், “பாஜகவிடம் பகைத்து கொள்ள வேண்டாம். அவ்வாறு பகைத்து கொண்டால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்.



சேலம் மாவட்ட பாஜகவினர், வேறு மாதிரியான ஆட்கள். செய்தியாளர்கள் கவனமாக இருங்கள்” என மிரட்டும் தோரணையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பாஜகவினரின் இந்த மிரட்டல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.