×

  இந்த விஷயத்தில் சுயதம்பட்டம் அடித்துக்கொள்ள பாஜகவுக்கு தகுதி இல்லை  - கே.எஸ்.அழகிரி காட்டம்..

 

நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுதாயத்தைப் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது  தாங்கள் தான் என சுய தம்பட்டம் அடித்துக்கொள்ள பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என  கே.எஸ்.அழகிர் விமர்சித்துள்ளார்.  

 இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுதாயத்தினரைப் பழங்குடியின பட்டியலில் இணைக்கும் வகையில், 1950 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் பழங்குடியின சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கல்வியறிவின்மை, சுகாதார சவால்கள், வேலையின்மை காரணமாக போராடுகிற 30000கும் மேற்பட்ட நரிக்குறவர், குருவிக்கார சமூகங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கிறேன்.

ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட பழங்குடியின திருத்த மசோதா கடந்த 8 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது. நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுதாயத்தைப் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்பது உலகறிந்த உண்மை. தாங்கள் தான் இந்த சாதனையை செய்ததாக சுயதம்பட்டம் அடித்துக் கொள்ள பா.ஜ.க.வினருக்கு தகுதியே கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.