×

அடுத்த மாதம் மின் கட்டண ரசீது வரும்போது பாருங்கள்! அதிர்ச்சியாக இருக்கும்- காயத்ரி ரகுராம்

 

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் நடிகை காயத்ரி ரகுராம் பங்கேற்றார். 

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு எதிரொலியாக தமிழகம் முழுவதும் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் மாமல்லன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர் நலன் பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் பங்கேற்றார். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை காயத்ரி ரகுராம், “மின் கட்டணம் உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மாநில அரசு மின்சார கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றை உயர்த்தி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் வைத்துள்ளார்கள். இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பாரதிய ஜனதா கட்சி மக்களுக்காக குரல் கொடுத்து விலை உயர்வு, ஊழலை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தம் காரணமாக மின்சார கட்டணம் உயர்வு என்பதை நிரூபிக்கட்டும். ஏன் நிரூபிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்த மாதம் மின் கட்டண ரசீது வரும்போது எவ்வளவு கட்டண உயர்வு என்பது உங்களுக்கு தெரியும், அப்போது உங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும்” எனக் கூறினார்.