×

10% இட ஒதுக்கீடு- பாஜகவின் 'சம நீதி' கொள்கைக்கு கிடைத்த வெற்றி: வானதி சீனிவாசன்

 

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ஜ.க.வின் 'சம நீதி' கொள்கைக்கு கிடைத்த வெற்றி என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (EWS)10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 103 வது திருத்தம் செல்லும் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுப் பட்டியலில் உள்ள ஏழைகளுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு மருந்தாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

இந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்துள்ள முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு. தமிழக மண்ணிலிருந்து, சமூக நீதிக்கான குரலை, நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்" என கூறியுள்ளார்.

இதுவரை இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத, பொதுப்பட்டியலில் (O.C) உள்ள ஏழைகள். உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க முடியாமலும், அரசு வேலை வாய்ப்புகளைப் பெற முடியாமலும் இருந்தனர். இந்த இந்த 'சமூக அநீதி'யை சரி செய்யவே, கடந்த 2019 ஜனவரியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது.

'சமூக நீதி' என்பது அனைவருக்கும் 'சம நீதி'யை வழங்குவது தான். அதைத்தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது, ஆனால், தி.மு.க.வின் சமூக நீதி என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரானதாகவே எப்போதும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக வெறுப்புணர்வை விதைத்து, அதன் மூலம் அரசியல் நடத்தி வரும் கட்சிதான் தி.மு.க.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் பிராமணர்கள் மட்டும் பயன்பெறவில்லை அப்படியொரு பிரசாரத்தை தி.மு.க. செய்து வருகிறது. தமிழகத்தில் பிராமணர்கள் மட்டுமல்லது, வேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு உள்ளிட்ட 60 க்கும் அதிகமான சமூகத்தினர், இந்தப் பத்து சதவீத இட ஒதுக்கீட்டுக்குள் வருகின்றனர். தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இந்த சமூகத்தினரையும் பலி கொடுக்க தி.மு.க. தயாராகிவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.