×

அடுத்தவர் சாதனைக்கு, தங்கள் அட்ரஸை ஓட்டும் திமுக- பாஜக விமர்சனம்

 

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) பட்டியலில் உள்ள நரிக்குறவர் இனத்தை பழங்குடி இனத்தவர் (ST)பட்டியலில் சேர்க்கவலியுறுத்தி சுமார் 60 ஆண்டுகளாக அந்த சமூகத்தினர் போராடி வருகின்றனர். 1965 , 1967 மற்றும் 2013- ஆகிய ஆண்டுகளில் இதற்கான பரிந்துரைகள் ஏற்கப்பட்டும் இது நாள்வரை நிறைவேற்றப்படாத நிலையில்.நேற்று பாரதப்பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தங்களால்தான் நடந்தது என தமிழக அரசு பெருமைப்பட்டுக்கொள்வதாக பாஜக விமர்சனம் செய்துள்ளது. 

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள், மிகுந்த நலிந்த நிலையில் இருந்த போதிலும், பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தமையால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தவறிப் போய்க் கொண்டிருந்தன. இந்த நிலை மாற, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்கள், மத்தியில் காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் இருந்து, தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். பல காலமாக இவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக, கிடப்பில் போடப்பட்டன. 

இந்நிலையில் நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் தமிழக பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து, தங்கள் குறைகளை எல்லாம் எடுத்துக்கூறினர். தொடர்ந்து 40 ஆண்டுகாலமாக போராடியும் திமுக காங்கிரஸ் அரசுகள், அவர்களை உதாசீனப் படுத்தியதை மிகுந்த வலியுடன் எடுத்துக் கூறினர். எங்களை சந்தித்து உங்கள் குறைகளை எடுத்து உரைத்துள்ளீர்கள். மாண்புமிகு பாரத பிரதமரின் கவனத்திற்கு இதையெல்லாம் கொண்டுசென்று, அனைவருக்கும் விரைவில், நல்ல பதில் சொல்வேன் என்ற உறுதியை நான் அளித்திருந்தேன். அதேபோல புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டக் கூட்டத்தில், அங்கே திரளாக வந்திருந்த நரிக்குறவர்களின் பலத்த ஆரவாரத்திற்கு மத்தியில், அவர்களின் கோரிக்கை விரைவில் மத்திய அரசால் நிறைவேற்றி வைக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தேன்.

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட கவனத்திற்கும், மத்திய அரசின் எஸ்டி பிரிவினரின் பதிவாளர் கவனத்திற்கும், இம் மனுக்களைக் கொண்டு சென்று, நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்களை பழங்குடியினர் எஸ்டி பட்டியலில் சேர்க்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் தமிழக பாஜகவால் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் நரிக்குறவர்கள் குருவிக்காரர்கள் சமூகங்களை மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகைசெய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டியின் பரிந்துரை நரிக்குறவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே. 1967ஆம் ஆட்சிக்கு வந்த திமுக இதை செய்ய தவறியது ஏன்? அதற்கு பின்பு காங்கிரஸ் கட்சியுடன் பல ஆண்டுகள் மற்றும் ஜனதாதளத்துடன் கூட்டணியில் இருந்த திமுகவுக்கு இதை பற்றி சிந்திக்க மனம் வரவில்லையா? 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது நரிக்குறவ மக்களை பழங்குடியினர் பட்டியிலில் சேர்ப்பதற்கு திமுக ஏன் முயற்சி எடுக்கவில்லை?

2011-12ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சமூகநீதி மற்றும் அதிகாரத்திற்கான நிலைக்குழுவின்படி 24.11.2009ஆம் ஆண்டு நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக விளக்கங்கள் கேட்டு இந்திய பதிவாளர் ஜெனரல் கடிதம் அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு போதிய விளக்கம் வழங்காமல் அன்றைய திமுக அரசு என்ன செய்துகொண்டிருந்தது. அப்போது மத்தியில் அதிகார உச்சியில் இருந்த திமுக நரிக்குறவ மக்களை பற்றி கவலைப்பட்டதுண்டா? குறைந்த சதவீத வாக்குகள் உள்ள சமுதாயத்தால் என்ன பயன் என்று உதாசீனப்படுத்தியது தான் திமுக செய்த ஒரே சாதனை.

1965 ஆம் ஆண்டுமுதல் தங்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று போராடி கொண்டிருந்த, நரிக்குறவர் சமுதாய மக்கள், தங்களின் நாற்பதாண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய அரசுக்கும், தங்களின் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர். மத்திய அரசின் ஆட்சியும் அதிகாரமும் தங்கள் கையில் இருந்த போதும்,  மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த போதும், நரிக்குறவர் இன மக்களின் கோரிக்கைகளை எல்லாம் கிடப்பில் போட்ட திமுக, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் நடவடிக்கையால், மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும், வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

மாண்புமிகு முதல்வரின் ஒற்றைக் கடிதத்தில் மத்திய அரசு இப்படி வேலை செய்யும் என்றால் அவர்கள் ஆட்சிக்காலத்திலேயே இன்னும் எளிதாக குருவிக்காரர்கள்  கோரிக்கையை தங்கள் அமைச்சர்களை வைத்தே, நிறைவேற்றி தந்திருக்கலாமே? திமுக தான் ஆட்சி செய்யும் தமிழ் மாநிலத்தில் மக்களெல்லாம் சொத்துவரி ஏற்றத்தில், பால் விலை ஏற்றத்தில், பெட்ரோல் விலை ஏற்றத்தில், குடிநீர் வரி ஏற்றத்தில், மின்கட்டண ஏற்றத்தில், அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது.... அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அடுத்தவர் சாதனைக்கு தங்கள் அட்ரஸை ஓட்டுவதுதான் திராவிட மாடலா?  தங்களால் எதுவுமே உருப்படியாகச் செய்ய முடியாது என்று நம்புவதால் அடுத்தவர் உழைப்பில் ஒட்டிப் பிழைக்க, ஸ்டிக்கர் ஒட்டுகிறதா திமுக? மொழியில் அரசியல், கல்வியில் அரசியல், ஜாதியில் அரசியல், மதத்தில் அரசியல், பிரிவினைவாத அரசியல், என்றெல்லாம் மக்களை தொடர் பதட்டத்தில் வைத்துக்கொண்டிருக்கும் திமுக அரசு, தங்களின் வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தமிழகத்தின் கனிமங்களை எல்லாம் கமிஷனுக்காக கொள்ளை போக அனுமதித்துவிட்டு, இந்தியா ஹிந்தியா என்று அடுத்த நாடகத்தைத் தொடங்குகிறது.

திருமதி திரௌபதி முர்மு அவர்கள் நமது நாட்டின் ஜனாதிபதி ஆன பின்பு பழங்குடியின மக்களும், நம் நாட்டின் உயர் பதவிகளில் அமரமுடியும் என்பதை தனது நடவடிக்கைகளின் மூலமாக எடுத்துரைத்தார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்.செயல் வடிவத்தில் நடத்திக் காட்டும் சமஉரிமை என்பது கடிதங்கள் எழுதுவதால், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதால் மட்டும் வந்துவிடாது, அதை நடைமுறைப்  படுத்தி அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்புகளை உருவாக்குவது தான் ஒவ்வொரு அரசின் கடமை. அதைச் செய்யத்தவறியது திமுக. ஆனால் மத்திய அரசு நரிக்குறவ சமுதாய மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கீரியையும், பாம்பையும், சண்டை விடப் போகிறேன் என்று வித்தை காட்டி ஏமாற்றும் வித்தைக்காரனைப் போல, விடியல் விடியல் வருகிறது வருகிறது என்று கூவிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, உருப்படியாக எதுவும் மக்களுக்குச் செய்யவில்லை. ஒருவேளை இந்த ஆட்சி முடிந்த பிறகுதான் தமிழக மக்களுக்கு உண்மையான விடியல் வரும் போலும்!!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.