×

“நா கூசாமல் பொய்...” ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

 

அது எப்படி நா கூசாமல் பாஜகவின் சாதனைகளை எல்லாம் தங்கள் சாதனைகளாக சொல்லிக் கொள்கிறார்களோ தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன், என்று திமுகவின் பாதை மாறா பயணம் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் “பாதை மாறா பயணம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், நூலாசிரியரை பற்றி குறிப்பிடும் போது, தங்க நாற்கர சாலையை அமைத்துத் தந்தவர் டி.ஆர்.பாலு அவர்கள் என்று குறிப்பிட்டார்.


அடுத்தவர்கள் சாதனை எல்லாம், அறிவாலயத்தின் கணக்கிலே வரவு வைத்துக் கொள்ளும், அவருடைய பழக்கம் இன்னும் மாறவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. உலகத்திற்கே தெரியும் தங்க நாற்கரச் சாலை திட்டம் என்பது மாட்சிமை மிக்க, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கனவு திட்டம். இந்தத் திட்டத்தை தொடங்கிய நாள் ஜனவரி மாதம், ஆறாம் தேதி 1999 ஆம் வருடம்(06.01.1999). அதேபோல், தமிழகத்தில் நாற்கர நெடுஞ்சாலைத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் திரு.பி.சி.கந்தூரி அவர்கள். இவர்தான் 7.11.2000 முதல் 22.05.2004 வரை நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர்.

சென்னை மும்பைக்கு இடையே 1,290 கிமீ (800 mi) இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் 31.08.2011 சென்னை கொல்கத்தாவிற்கு இடையே 1,684 கீமீ (1,046 mi) இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் 31.05.2013 திரு டி ஆர் பாலு அவர்கள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவி வகித்த காலம் 22.05.2004 முதல் 22.05.2009 வரை. ஆக ஜூலை மாதம் 2013ல் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறியது. ஆக தொடக்கத்திலும் முடிவிலும் இல்லாமல் இடையில் அமைச்சராக இருந்தவர், எப்படி, இத்திட்டத்தை தன்னுடைய தனிப்பட்ட சாதனையாகக் கூற முடியும்.

அது எப்படி நா கூசாமல் பாஜகவின் சாதனைகளை எல்லாம் தங்கள் சாதனைகளாக சொல்லிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. திரு டி ஆர் பாலு அவர்கள் செய்த மிகப் பெரிய சாதனை என்பது இந்த தங்க நாற்கரச் சாலை திட்டத்தில் காண்ட்ராக்டர்களிடம் கணிசமான அளவு கட்டாய வசூல் செய்தது ஆகும். முதல்வர் பேசுகின்ற போது திடீரென்று, ”அத்தைக்கு மீசை முளைத்திருந்தால் சித்தப்பா இருப்பார்” என்பது போல சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால், தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகியிருக்கும் என்று ஒரு சிரிப்பு வெடியை தூக்கி போட்டார்.

சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர்.பாலு-தான் முன்னெடுத்தார். ஆனால் அதனை பா.ஜ.க.தான் தடுத்து நிறுத்தியது என்று முதல்வர் குறை பேசினர். சேது சமுத்திர திட்டத்தை பற்றி பொதுமக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெரும் கப்பல்கள் செல்ல முடியாத அளவிற்கு மணல் திட்டுகள் அதிகம் உள்ள ஆழ்கடல் பகுதியில் இருந்து மண்ணை அள்ளி அதே கடலுக்குள் மிகஆழமான பகுதியில் வீச வேண்டும்.

கடலுக்குள்ளிருந்து மண்ணை அள்ளி கடலுக்குள்ளே வீசுவதால்... எவ்வளவு வேலை முடிந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் இந்த திட்டத்தின் மூலம் தன்னையும், தன் கழகத்தையும் வளப்படுத்திக் கொள்ள டி ஆர் பாலு முயற்சித்தது உண்மைதான்.
இந்த திட்டத்தை எப்படியும் செயல்படுத்த கருணாநிதி முனைந்தபோது, மணல் அள்ளும் காண்ட்ராக்ட் எடுப்பதற்கு கலைஞரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், டி.ஆர்,பாலுவிற்கு இடையே பெரும் போட்டி நடைபெற்றது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தால் கூட, ஒரு நேரத்தில் ஒரு கப்பல் மட்டும் தான் இதன் வழியே செல்ல முடியும். மு க ஸ்டாலின் அவர்கள் சென்னை நகர மேயராக இருந்தபோது, கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டியிருக்கும், ஒன்றுக்கும் பயன்படாத ஒரு வழி பாதை பாலங்களைப் போல,  இந்த சேது சமுத்திர திட்டத்திலும் ஒரு வழி பாதையாக மட்டும்தான் கப்பல்கள் செல்ல முடியும். அந்தப் பகுதியில் கடல் மண்ணரிப்பு தன்மையை பொறுத்தவரையில், கப்பல் கடந்து சென்ற பிறகு மணல் முடிவிடும் ஆகவே ஒவ்வொரு கப்பல் சென்ற பிறகும், ஒவ்வொரு முறையும் மணல் அள்ள வேண்டும். மணல் அள்ள ஏராளமான கோடிகள் செலவாகும். ஆகவே ஒருவேளை இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் எத்தனையோ பயன்களை டி ஆர் பாலுவும்  திமுகவும் அடைந்திருக்கும் அருமையான வாய்ப்பு உருவாகி இருக்கும்.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அங்கே ஒரு துறைமுகம் உருவாகி இருக்கும் கடல் வாணிபம் செலுத்தி இருக்கும் என்று இல்லாத துறைமுகத்தின் இன்றைய வளர்ச்சியை கனவு நிலையில் கணக்கிடுகிறார். செத்துப்போன மாடு இருந்தா, உடைஞ்சு போன கலயத்தில், ஒரு படி பால் கறக்கலாம். என்ற அர்த்தமில்லாத பேச்சை முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  பேசுகிறார் ஆனால் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி துறைமுகத்தை வணிக ரீதியாக சிறப்பாக எப்படி நடத்துவது என்ற அடிப்படை சிந்தனை கூட இந்த அரசுக்கு இல்லை. ஆனால் இல்லாத துறைமுகத்தை பற்றி கவலை கொள்கிறார்கள்.

இந்தியர்களின் பாரம்பரிய நம்பிக்கையான ராமர் பாலத்தை இடித்து, அங்கே அறிவியல் சாத்தியமில்லாத ஒரு நீர் வழித்தடத்தை உருவாக்கி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட அந்த திட்டம், நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் மானம்தான் கப்பலேறி இருக்கும்.
தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் சுயசரிதையான, 'பாதை மாறாப் பயணம்' திமுகவின் கமிஷன், கலெக்ஷன், கரெக்ஷன் என்ற திமுகவின் பாதை மாறாப் பயணத்தை உறுதி செய்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.