கேபிள் விவகாரம்- குடும்ப வளர்ச்சிக்காக அரசு நிறுவனத்தை பலிகொடுக்க திமுக முயற்சி: அண்ணாமலை
ரூ.20 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில் இரு நாட்களாக தடை ஏற்படுத்தி சுமங்கலி கேபிள் விஷன் போன்ற தனது குடும்ப நிறுவன வளர்ச்சிக்காக, அரசு நிறுவனத்தை திமுக பலிகொடுக்க நினைக்கிறது என பாஜக அண்ணாமலை சாடியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு கேபிள் டிவி சந்தாதாரர்கள் எந்த ஒரு தொலைக்காட்சியையும் பார்க்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதனால் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாகவும் இதனால் உடனடியாக தொழில்நுட்பக் கோளாறை சரி செய்து அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும்
தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனார்
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற திமுக அரசு செயல்பட்டு வருகிறது சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமான, எளிய பொது மக்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில், கடந்த இரு நாட்களாக தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த இரண்டு நாட்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006 - 2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவு படுத்தியிருக்கும்
பெருமளவில் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ஹாத்வே கேபிள் நிறுவனத்தின் கேபிள் கம்பிகளை அறுத்தெறிந்தும் அதைச் சார்ந்திருந்த கேபிள் ஆப்பரேட்டர்களை அடியாட்களைக் கொண்டு மிரட்டியும் இந்த நிறுவனத்தை தமிழகத்தை விட்டே விரட்டி, கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக மாற்றிய திமுகவின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன் தற்போது, அரசு கேபிள் நிறுவனத்தையும் முடக்கி, மீண்டும் கேபிள் தொழிலை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற முயற்சிப்பதும், அரசு கேபிள் ஒளிபரப்பில் தடைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களுக்கு திமுக அரசு உதவுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.