×

பாஜகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி- அண்ணாமலை

 

சென்னை தியாகராயநகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மூத்த தலைவரும் ,  மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் பாஜகவின் மையக் குழு கூட்டம் நடைபெற்றது . 

இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “2 நாட்களாக தமிழகத்திற்கு பிரதமர் , உள்துறை அமைச்சர் வந்தது ஊக்கம் தருகிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாது பிரதமருக்கு நேற்று தமிழ்மக்கள் வரவேற்பு அளித்தனர்.  பிரதமர் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவில் தனது காரில் நின்றபடி தொண்டர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் கையசைத்து சென்றார் . தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமாக பிரதமர் இருக்கிறார். காசி தமிழ் சங்கம் குறித்து பிரதமர் நேற்று பேசினார். தமிழகத்தில் இருந்து 2400 நபர்கள் 12 ரயிலில் இதில் பங்கேற்க காசி பயணம் செய்கின்றனர் , முதல் குழுவை வாரணாசியில் 19 ம் தேதி வரவேற்க வருவேன் என பிரதமர் கூறினார். 

உலகின் தொன்மையான மொழி தமிழ் , அதை பறைசாற்றுவது தமிழர்களின் கடமை மட்டுமல்ல , இந்தியாவின் கடமை . தமிழகத்தில்  மருத்துவ , பொறியியல் கல்லூரியில் முழுமையாக தமிழில் பாடங்களை சொல்லித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியமான கருத்துகளை அமித்ஷா இன்று கூறினார் . 2010 ல் பொறியியல் கல்வி தமிழில் கொண்டு வரப்பட்டு , 1350 பொறியியல் படிப்பு இடங்கள்  உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால்  50 மாணவர்களே தமிழில்  இந்த ஆண்டு பொறியியல் பயில்கின்றனர் .  தாய்மொழியே பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்பது அமித்சாவின் விரும்பம் . மழையிலும் பிரதமரை வரவேற்ற தமிழக மக்களுக்கு எங்களது நன்றி . இந்தியளவில் 14 லட்சம் ' வணக்கம் மோடி' ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வரலாற்று சாதனை படைத்தது.  கடந்தமுறை பிரதமர் வந்ததை விட 2 மடங்கு ஹேஷ்டேக் ஆதரவு  அதிகம். 

அமித்ஷா பங்குபெறும் நிகழ்ச்சியில் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பதில்லை. ஆனால் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் சிலர் சேர இருப்பதாக பாஜக நிர்வாகிகள் சிலர் கூறியதாக செய்தியாளர்கள் கேட்கின்றனர். இதுபோல எல்லா விசயத்தையும் sensation ஆக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு அன்பான வேண்டுகோள் விடுத்து கொள்கிறேன் . முக்கியமான தலைவர்கள் பலர்  பாஜகவில் இணைய காத்திருக்கின்றனர். அதற்கான நேரம் வரும்போது அவர்களை சேர்த்து கொள்வோம் .  பிரதமருடன் ஒருமணி நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது . கட்சி வளர்ச்சி குறித்து பேசினாம். தேர்தல், கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை.  கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சரிடம் பொன் .ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார் .அவற்றை நிறைவேற்றி தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் இதற்காக முதலமைச்சருக்கு நேற்று நான் நன்றி கூறினேன். 1980 முதல் கன்னியாகுமரியில் நம்பர் 1 கட்சி பாஜகதான், இன்று ஆளும் கட்சியாக இருப்பதால் குமரி மேயர் பாஜகவினருக்கு எதிராக பேசுவது விரக்தியின் வெளிப்பாடு. பாஜகவினர் மீது தமிழகத்தில் போடப்படும் பொய் வழக்கு பற்றி விவரமாக அமித்ஷாவிடம் கொடுத்து உள்ளோம் , மத்திய அமைச்சர் அமித்ஷா அவற்றை கவனித்துப் பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.