×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சனை- முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

 

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் ஜனவரி 15ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் ஆகிய இருதரப்பினருக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்தியது.

இந்த நிலையில் அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையம் வந்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பியிடம் இதுகுறித்து கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், “அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சனையை ஆராய்ந்து பார்த்ததில் அவனியாபுரத்தில் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பின்னர் ஒரே ஜல்லிக்கட்டு ஆக நடத்திட அரசு உத்தரவிட்ட பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இந்த ஜல்லிக்கட்டில் தெங்கால் விவசாய சங்கம் சார்பில் ஏ.கே. கண்ணன், பாக்கியம் ஆகியோர் பொருளாதாரம் ஈட்டும் நோக்கத்தில் ஈடுபட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே உறுப்பினர் ஆக்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு உள்ளனர். மேலும் அவர்கள் பிற சமுதாயத்தினரை தக்க மரியாதை தரவில்லை என தெரிகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தனி நபருக்கோ அல்லது தனி ஒரு அமைப்புக்கோ அனுமதி வழங்காமல் இந்த ஜல்லிக்கட்டை அவனியாபுரம் அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியிருக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட அனுமதி வழங்க வேண்டும்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.