×

கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு - அன்புமணி வலியுறுத்தல்

 

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயதான கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையை உளுக்கியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.