கைலாசாவை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகர நிர்வாகம்
நித்தியானந்தாவின் கைலாசாவை நாடாக அங்கீகரித்திருக்கிறது அமெரிக்க நகர நிர்வாகம். இது குறித்து நித்தியானந்தாவின் டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலையில் பிறந்து கர்நாடக மாநிலத்தில் பிடதி பகுதியில் ஆசிரமம் அமைத்து உலகம் முழுவதும் கிளைகள் பரப்பி புகழ்பெற்ற நித்தியானந்தா, பாலியல் புகார் உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவானார். அதன் பின்னர் அவர் வெளிநாட்டில் தனித்தீவில் கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி வருவதாக அறிவித்தார்.
தனி நாட்டுக்கான நாணயம், அரசு சின்னம், சட்ட திட்டங்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது அறிவித்து வந்தார். இந்த நிலையில் அவர் அறிவித்த கைலாசாவை ஒரு நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருப்பதாக நித்தியானந்தாவின் டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இருக்கும் நிவார்க் நகரத்தின் சார்பில் அந்நகரத்தின் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயபிரியா நித்தியானந்தாவும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இது குறித்த ஆதாரங்களை நித்தியானந்தாவின் கைலாசா டுவிட்டர் தளம் வெளியிட்டு இருக்கிறது.