×

1000 புதிய பேருந்துகளுடன் , 500 மின்சார பேருந்துகள் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்..

 


1000 புதிய பேருந்துகளை தொடர்ந்து, 500 மின்சார பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் கோரப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி தலைவரும்,  சட்டமன்ற உறுப்பினருமான  உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நலத்திட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர்  செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் , “ தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.   விரைவில் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், தொடர்ந்து 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.  அதில் 100 பேருந்துகள் சென்னை மாநகரின் சேவைக்காக விடப்படும்.
 


மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் 40 சதவீதமாக இருந்த மகளிர் பயணிகளின் எண்ணிக்கை, தற்போது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது . இந்த திட்டத்தால் பணிக்கு செல்லும் பெண்கள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர்.  வழிதடங்களில் உரிய நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்பதனை பொதுமக்கள் சென்னை பஸ் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் ”  என்றும்  கூறினார்.