×

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

 

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனுவாக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  அந்த மனுவில் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறி 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீட் தேர்வு அறிவிக்கைக்கு எதிராக வழக்குகள் கொடுக்கப்பட்டிருந்தன.  நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கானது கடந்த 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நெடுநாட்கள் நிலுவையில் இருப்பதன் காரணமாக நீட்  சட்டத்தின் அடிப்படை தன்மை குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்பது உங்களுக்கு புரியவில்லையா என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன்,   வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்தி  வைக்கப்பட்டது. இந்நிலையில் நீட் வில்க்கு தொடர்பான வழக்குகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன் , மா.சுப்பிரமணியன் ,  தலைமைச் செயலாளர், மருத்துவ துறை செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் சட்டத்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.