×

இந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள்; ஆகவே இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்- சுஹாசினி

 

இந்தி நல்ல மொழி அதை நாம் கற்று கொள்ள வேண்டும் என திரைப்பட நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல தங்க நகை கடையில் அட்சய திருதியை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி பங்கேற்றார். 

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் தற்கால சூழலில் தங்கம் சிறந்த முதலீடு. மலையாள மொழி படங்களை இன்று இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்கின்றனர். துல்கர் சல்மான், பகத் பாசில் போன்ற மலையாள மொழி நடிகர்களை இந்திய மக்கள் பலரும் அறிந்திருக்கின்றனர். தென் இந்திய படங்களுக்கு மிக பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. தமிழ், மலையாள படங்கள் தரத்தில் சிறந்தவையாக இருக்கின்றன. தெலுங்கு படங்கள் பிரம்மாண்டமாகவும் கன்னட படங்கள் நாம் யோசிக்க முடியாத அளவுக்கும் முன்னேறி சென்று கொண்டிருக்கின்றன.  தன்னை போன்ற நடிகர்களுக்கு அனைத்து மொழிகளும் தெரிந்தே ஆக வேண்டும். ஆகவே அனைத்து மொழிகளையும் மதித்தே ஆக வேண்டும். 

எல்லோரும் அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும். இந்தி நல்ல மொழி அதை கற்று கொள்ளக்வேண்டும். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அவர்களுடன் நாம் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்று கொள்ள வேண்டும். தமிழர்களும் நல்லவர்கள் அவர்களுடன் தமிழில் பேசினால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என தெரிவித்தார்.