×

இயக்குனர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலில் பொங்கலிட்டு வழிபட்ட நடிகை நயன்தாரா

 

கும்பகோணம் அருகே உள்ள வழுத்தூரில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலில் நடிகை நயன்தாரா பொங்கலிட்டு வழிபட்டார். 

நடிகை நயன்தாரா இவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் இன்று மதியம் பாபநாசம் அருகிலுள்ள வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தார். இந்த ஆலயம் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவில் ஆகும். நடிகை நயன்தாரா இவ்வாலயத்திற்கு வந்திருக்கும் தகவல் பரவியதும்  அந்தக் கிராமத்திலுள்ள பெரும்பாலான மக்கள் அக் கோயிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ்சிவனுடன் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் செய்ததும் மங்களம்யானையிடம் வாழைப்பழத்தை கொடுத்து ஆசி பெற்றார்.