×

அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்! அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை

 

புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்று ஆளுநர் உத்தரவுப்படி, சமூகநலத்துறை அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 


புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உத்தரவுப்படி சமூகநலத்துறைச்செயலர் உதயக்குமார் அனைத்து செயலர்கள் மற்றும் துறைத்தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “சமூகநலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 13 முக்கிய திட்டங்களான, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இடையேயான திருமணத்திற்கான ஊக்கத்தொகை வழங்குதல், மாற்றுத் திறனாளிகள் (இருவரும்) திருமணத்திற்கு ஊக்கத்தொகை வழங்குதல்,  மாற்றுத் திறனாளிகளுக்கு சொந்த வாகனங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குதல், மோட்டார் வாகனங்கள் வாங்க மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்குதல், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், கண் தானம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை, மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மாநில விருது, பெருந்தலைவர் காமராஜ் திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளின் இறுதிச் சடங்குகளுக்கு நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டிகள் வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு போக்குவரத்து உதவித்தொகை வழங்குதல், திறமையான பார்வையற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குதல், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற பார்வையற்ற மாணவர்களுக்கு நிதியுதவி, வயதானவர்களுக்கு போர்வை மற்றும் காலணிகள் இலவச விநியோகம். பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள், முதியோர்கள், ஊனமுற்றோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் நலனுக்காக குடியிருப்பு இல்லங்களை நடத்தும் அரசு சாரா நிறுவனங்களுக்கான மானியம் பெறுவோருக்கு இனி ஆதார் எண் கட்டாயம் தேவை என்று ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இத்திட்டங்கள் புதுச்சேரி நிதி மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியில் செயல்படுகிறது. இத்திட்டங்களில் பலன் பெறுவோர், பெற தகுதியுடையோர் ஆதார் எண் ஆதாரத்தை அளிப்பது அவசியம். திட்டங்களில் பலன் கிடைக்க ஆதார் இல்லாதோர் முன்னதாக விண்ணப்பிப்பது பெறுவது அவசியம். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.