×

#BREAKING  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்!
 

 

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்றார் . அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.  இதில் அதிமுகவினர் 11 பேரும்,  காவல் துறையினர் இரண்டு பேரும் காயம் அடைந்தனர் . அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அத்துடன் அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டது


இதை எடுத்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய் துறையினர் போலீசாருடன் ஆலோசனை நடத்தினர் . இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் காவல்துறையினருடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

  இந்நிலையில் வருவாய் துறையை சேர்ந்த வருவாய் கோட்டாட்சியர் ஓபிஎஸ் இடம் சீல் வைப்பதற்கான நோட்டீசை வழங்கிய பின்னர் தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது; இந்த நடைமுறை 145 குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவின் அடிப்படை ஆகும். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வான சில மணி நேரத்தில் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது