×

நாளை வாக்குப்பதிவு ..கடைசி நேரத்தில் திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர்!!

 

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திமுகவில் இணைந்தது அந்தியூர் பேரூராட்சியில் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 483 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தவிர) 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்  ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி முத்துக்குமாரசாமி தெருவை சேர்ந்த பழனிவேல்.  அதிமுகவின் ஒன்பதாவது வார்டு பொறுப்பாளராக உள்ள இவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.  இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் இவர் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை வரை அதிமுக வேட்பாளரான தனக்கு, இரட்டை இல்லை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று வீதி வீதியாக தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார்.

நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் முன்னிலையில் அதிமுக வேட்பாளர் பழனிவேல்  தன்னை, திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர். நாளை  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளராக பழனிவேல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அதிமுக வேட்பாளர் பழனிவேல் ,அவரின் தம்பி சண்முகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தது  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.