×

“விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை நடத்தினால் அதிமுகவினர் தற்கொலைப்படைக்காரர்களாக மாறுவர்”

 

அதிகாரிகள் காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டால் ஒரு வருடம் இரண்டு வருடம் பதவியில் இருப்பவர்கள் தப்பித்துக் கொள்வீர்கள், ஆனால் ஐந்து வருடம் ஆறு வருடம் தொடர்ந்து பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுது மாட்டிக்கொள்வீர்கள், எங்களுக்கு ஏதும் பிரச்சனை கிடையாது உங்களுக்கு தான் பிரச்சனை என அரசு அதிகாரிகளை மிரட்டும் தோனியில் புதுக்கோட்டை நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜநாயகம்,  முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான வைரமுத்து உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்பாட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது கண்டிக்கத்தக்கது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மின் கட்டணத்தை உயர்த்த கூடாது, மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சராக உள்ள முக ஸ்டாலின் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கைகளில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் தற்பொழுது அவர் ஆட்சிக்கு வந்த பிறகு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளார். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டால் ஒரு வருடம் இரண்டு வருடம் பதவியில் இருப்பவர்கள் தப்பித்துக் கொள்வீர்கள். ஆனால் ஐந்து வருடம் ஆறு வருடம் தொடர்ந்து பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுது மாட்டிக்கொள்வீர்கள். எங்களுக்கு ஏதும் பிரச்சனை கிடையாது, உங்களுக்கு தான் பிரச்சனை” எனக் கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம்  பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ராஜநாயகம், “முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பல கோடி ரூபாய்க்கு அதிபதி அவர் வீட்டில் நுழைந்து சோதனை என்ற பெயரில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மொபைல் ஃபோன்களை எடுத்துச் செல்கின்றனர். அதனால் மீண்டும் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினால் அதிமுகவினர் தற்கொலை படைகளாக மாறுவார்கள்” என தெரிவித்தார்.