×

இதெல்லாம் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள செய்யும் பிளான்- தங்கமணி

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பல்வேறு ஊராட்சிகளில் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி, கான்கிரீட் சாலை, கால்வாய் உள்ளிட்ட திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான தங்கமணி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, “பல்வேறு போராட்டத்திற்கு பிறகு அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்த்துள்ள நிலையில், தற்போது இடம் பெற்றுள்ள கரும்பு கொள்முதலுக்கு அறிவித்துள்ள 33 ரூபாய் விலை இடைத்தரகர்கள் இடையூறு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்காக நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நூல் தரமற்ற முறையில் இருப்பதாகவும், இதன் மூலம் நெசவாளர்கள் உற்பத்தி செய்வதில் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் நெசவாளர்கள் தெரிவிக்கின்றன.

இலவச வேட்டி, சேலை உற்பத்தியை நிறுத்த வேண்டும் எண்ணத்தின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான உத்தரவு ஆணை காலதாமதமாக வெளியிடப்பட்டதாக நெசவாளர்கள் புகார் கூறுகின்றனர். பொதுவாக தொண்டர்கள் ஆதரவு உள்ளவர்கள் தனக்கு உள்ள ஆதரவாளர்கள் குறித்து வெளியே தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் ஓபிஎஸ் தனக்கு ஆதரவாக உள்ளவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெறவுள்ள ஈபிஎஸ் வாதத்தின் போது சிறப்பாக வாதங்களை முன்வைத்து வெற்றி பெற்று ஈபிஎஸ் பொதுச் செயலாளராக வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார்.