×

நடிகை சித்ரா வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு? ஜெயக்குமார் ஓபன் டாக்

 

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளி யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார். அதில் நடிகை சித்ரா தற்கொலைக்கு காரணமான மாபியா கும்பலுக்கு அரசியல் தொடர்பு உள்ளதாகவும் , அந்த அரசியல் தொடர்பு உள்ளவர்களைப் பற்றி வெளியில் கூறக் கூடாது என்ற ஒரு கும்பலும், அந்த அரசியல் தொடர்பு உள்ளவரிடம் பணம் பறிக்கலாம் என்று கூறி மற்றொரு கும்பலும் தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாகவும் தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரி புகார் அளித்திருந்தார்.

 நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆறாவது முறையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அதிமுகவினருக்கும், முன்னாள் அமைச்சருக்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியானது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு,  மறு விசாரணை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை. மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயம் இல்லை. உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.உரிய விசாரணை நடத்தி யாராக இருந்தாலும் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.