×

தமிழகத்தில் மின் தடை ஏற்படும் சூழ்நிலையை தடுக்க வேண்டும் - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

 

தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் அனைவருக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுதியுள்ளார். 

ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நிலக்கரி, பெட்ரோல், டீசல், உரங்கள், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசியமானப் பொருட்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவற்றின் இருப்பைக் கண்காணிப்பது, தேவைக்கேற்ப அவற்றை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறுவது, அவ்வாறு பெற முடியவில்லை என்றால், அவற்றை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பது ஆகியவை மாநில அரசின் இன்றியமையாத கடமையாகும். ஆனால், இந்த பொறுப்பை உணராமல், வெற்றி என்றால் அதற்கு தி.மு.க. தான் காரணம் என்றும், பிரச்சனை என்றால் பிறர் மீது பழி போடுவதும் தி.மு.க.விற்கு வாடிக்கையாகிவிட்டது.

நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள மாண்புமிகு எரிசக்தித் துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் மின் தேவை 17,300 மெகாவாட் என்றும், இதற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்றும் ஆனால் மத்திய அரசு 48 ஆயிரம் டன் நிலக்கரியைதான் வழங்குகிறது என்றும், பற்றாக்குறையாக உள்ள நிலக்கரியை பெற ஒப்பந்தப்ப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், நிலக்கரி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்றும் கூறியுள்ளதாக  பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அதாவது, சொத்து வரி உயர்விற்குக் காரணம் மத்திய அரசு தான் என்று  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எப்படி சொன்னாரோ, அதே பாணியில், மின் தடைக்குக் காரணம் மத்திய அரசு என்பதை இப்பொழுதே சொல்லிவிட்டார்  அமைச்சர். அதாவது, மின் தடை பெரிய அளவில் ஏற்பட்டால் அதற்குக் காரணம் மத்திய அரசு என்பதுதான் இதன் பொருள். இந்தக் கூற்று ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு தி.மு.க. அரசுதான். மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து பிறர் பழி போடுவதோ கண்டனத்திற்குரியது. அல்லது அதற்கான காரணத்தைக் கூறுவத எனவே,  முதலமைச்சர்  இதில் தனிக் கவனம் செலுத்தி, மின் தடை ஏற்படாமல் அனைவருக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.