×

ஆண்மை இருந்தால் ஈரோட்டில் போட்டியிட்டு பாருங்க... ஓபிஎஸ்-க்கு சவால்

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்மை இருந்தால் பன்னீர்செல்வம் போட்டியிட்டுப் பாருங்கள், உங்கள் டெபாசிட்டை இழக்க செய்வதற்கு ஆண்மையோடு தயாராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சவால் விடுத்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் விழா அதிமுக ஒன்றிய கழக சாா்பில் ஒன்றிய  செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான  அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு எம்ஜிஆர் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன் சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அழிக்க வேண்டும் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என பல்வேறு சதி செய்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் துரோகி பன்னீர்செல்வம். நடைபெறக்கூடிய ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என எடப்பாடியார் தெரிவித்தார். ஓபிஎஸ் அவர்களே உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், ஆண்மை இருந்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் களத்தை காண வாருங்கள். உங்களை டெபாசிட் இல்லாமல் செய்வதற்கு எடப்பாடியார் ஆண்மையோடு இருக்கிறார்” என ஆவேசமாக பேசினார்.