×

“பாஜக என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு கட்டுப்படுவேன்”

 

பாரதிய ஜனதா கட்சி எந்த முடிவு எடுத்தாலும் அதுக்கு கட்டுப்படுவேன் என புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள புதிய நீதி கட்சி அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்தை அதிமுகவின் ஈபிஎஸ் தரப்பினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோகிலேந்திரா , வளர்மதி , பெஞ்சமின் ஆகியோர் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக  ஆலோசனை நடத்தினர். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், “அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். அதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் ,கோகிலேந்திரா , வளர்மதி பெஞ்சமின் ஆகியோர் என சந்தித்து பேசினர். 2014ம் ஆண்டு பாஜக சார்பில் தாமரைச் சின்னத்தில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோம். எனவே அன்று முதல் இன்று வரை கூட்டணியில் இருந்து வருகிறோம். பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். இன்னும் இரண்டு நாட்களில் தேசிய ஜனநாயக கூட்டணி நல்ல முடிவெடுக்கும் என எதிர்பார்க்கிறேன். பாரதிய ஜனதா கட்சி எந்த முடிவு எடுத்தாலும் அதுக்கு கட்டுப்படுவேன்” என தெரிவித்தார்.