×

காதல் மனைவி திருமணமான 8 நாட்களில் பிரிந்து சென்றதால் இளைஞர் தற்கொலை

 

கள்ளக்குறிச்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் 8 நாட்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே பொற்படாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் அருள்பிரகாஷ் இவரும், தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து கடந்த 8-ந்தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து காதல் ஜோடிகளின் பெற்றோர்களை வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் இளம்பெண் தனது பெற்றோருடன் செல்வதாகவும், மேற்படிப்பு படித்து முடித்து விட்டு 2 ஆண்டுகள் கழித்து அருள்பிரகாசுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி, அவர் கட்டிய தாலி மற்றும் மெட்டியை கழற்றி அருள்பிரகாசிடம் கொடுத்து விட்டு, தனது பெற்றோருடன் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த  அருள்பிரகாஷ்  வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டார். கள்ளக்குறிச்சி ‌அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக  சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அருள்பிரகாஷ்  உயிரிழந்தார். சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காதல் திருமணம் செய்து கொண்டு 8 நாட்களில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.