×

காதலித்து ஏமாற்றிய வழக்கில் சிறைக்கு சென்ற வாலிபர் ஜாமினில் வெளிவந்தவுடன் காதலியுடன் திருமணம்

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ரம்யாவும் பக்கத்து ஊரான கோட்டப்பட்டியை சேர்ந்த வாலிபர் அழகுராஜா ஆகிய இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது. அழகுராஜா ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகிவந்துள்ளார்.

இந்தநிலையில் அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு அழகுராஜை அவரது வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் ரம்யா புகாரளித்தார். இப்புகாரின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு அழகுராஜா கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவுடன் சிங்கப்பூருக்கு தப்பிசென்றார். இவர் வெளிநாடு சென்றதால் கொட்டாம்பட்டி காவல்துறையினரால் லுக்அவுட்  நோட்டீஸ் அப்போது வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பி வந்த அழகுராஜா லுக்அவுட் நோட்டீஸ் காரணமாக போலீசார் பிடித்து கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மேலூரிலுள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் இன்று இந்த வழக்கில் ஜாமீனில் வெளியேவந்த அழகுராஜா, காதலித்து ஏமாற்றிய ரம்யாவை சிறையைவிட்டு வெளியே வந்தவுடன் அடுத்த நிமிடமே சிறை வளாகத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் வைத்து தாலிகட்டி திருமணம் செய்துகொண்டார்.இந்த நிகழ்ச்சியில் ரம்யாவின் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.