×

ஆன்லைன் ஆப் மூலம் வாங்கிய கடன் - நெருக்கடியால் தூக்கில் தொங்கிய ஐடி ஊழியர்!!

 


சென்னை கேகே நகர் பகுதியில் சேர்ந்தவர் நரேந்திரன்.  இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.  நேற்று காலை தனது பெற்றோர் வெளியில் சென்று விட்ட நிலையில் நரேந்திரன் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நரேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  முதல்கட்ட விசாரணையில் நரேந்திரன் பல்வேறு ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பல ஆயிரம் ரூபாய் கடன்  பெற்றதாகவும்,  கடனை உடனடியாக திரும்ப கட்ட சொல்லி நரேந்திரனுக்கு செல்போனில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது.  ஃபோனை எடுக்காவிட்டால் அவரது உறவினர்கள் செல்போனுக்கும் தொடர்பு கொண்டு நரேந்திரன் வாங்கிய கடனை திரும்ப கட்டும்படி வற்புறுத்தி வந்துள்ளனர்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நரேந்திரன்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதனால் அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் நரேந்திரனை தற்கொலைக்கு தூண்டி நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலம் வாங்கிய கடன் ஓர் உயிரையே பறித்துவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.