×

சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

 

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சத்தியமங்கலம் அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் இன்று மதியம் 2 மணி அளவில், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றில் நான்கு பேர் பயணித்தனர். மைசூரை சேர்ந்த முகமது இப்ராஹிம், முகமது யாசின் உள்ளிட்ட ஆண்கள் நான்கு பேர் சத்தியமங்கலம் நோக்கி திம்பம் மலைப்பாதையில் 23வது கொண்டி ஊசி வளைவில் வந்து கொண்டிருந்த பொழுது காரின் முன் பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. 

இதை பார்த்த காரில் இருந்த நான்கு பேரும் உடனடியாக காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். காரின் முன் பகுதியில் உள்ள இன்ஜினில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்ததால், தீ மளமளவென பரவி, கார் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக ஆசனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்து தீயை அணைத்தனர். ஆனால் தீயை அனைத்த போதிலும், சொகுசு கார் முழுவதுமாக எரிந்து நாசமாகியது. திம்பம் மலைப்பாதையில் சொகுசு கார் தீப்பற்றி எரிந்ததை அவ்வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.