×

வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

 

வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 9-ம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது 10,11ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு, வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். மீனவர்கள் 8, 9-ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.