×

காதலன் கண்முன்னே லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த காதலி

 

தாராபுரத்தில் உள்ள காதலனை பார்க்க வந்த காதலி, காதலன் கண்முன்னே லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காந்திபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் மனோஜ் (20). மினி வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய சகோதரியின் தோழி ராமநாதபுரத்தை சேர்ந்த உடையார் என்பவரது மகள் காயத்ரி(19). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மனோஜ் சகோதரியை பார்க்க செல்லும் போது காயத்ரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஒரு வருடமாக பழகி வந்த நிலையில் காயத்ரி பொங்கல் விடுமுறையையொட்டி காதலன் மனோஜை பார்க்க தாராபுரம் வந்துள்ளார். இருவரும் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல் எதிர்புறம் காயத்ரியை இறக்கிவிட்டு விட்டு ஆச்சியூர் பிரிவு அருகே சென்று வாகனத்தை திருப்பி கொண்டு ஓட்டல் அருகே வந்துள்ளார். 

பின்னர் எதிர்புறம் நின்று கொண்டிருந்த காயத்ரியை ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது சாலையை கடந்து காயத்ரி வந்தபோது எதிர்பாராதவிதமாக தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து காதலன் மனோஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.