×

சென்னையில் மின்கசிவு காரணமாக தனியார் குடியிருப்பில் தீவிபத்து

 

சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் பின்புறம் தனியார் குடியிருப்பு அமைந்துள்ளது. மூன்று தளங்கள் கொண்ட இக்குடியிருப்பில் 12 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று மாலை 3 மணியளவில் குடியிருப்பின் கீழ் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் மீட்டரில் திடீரென கரும்புகை கிளம்பியதால், குடியிருப்பு வாசிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் மின் மீட்டர் மளமளவென தீப்பிடித்து எரிந்ததால் உடனடியாக அண்ணா நகர் தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த போது, முதல் தளத்தில் சிக்கி கொண்டிருந்த மூதாட்டி உட்பட இரு பெண்களும் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். பின்னர் உடனடியாக முதல் தளத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.  சுமார் 30 நிமிடமாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் மின்மீட்டர் அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. துரிதமாக தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்து சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்மீட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.