×

"இனி வரிசைகள் இல்லை , QR மட்டுமே" என்ற புத்தம் புதிய முறை!!

 

"இனி வரிசைகள் இல்லை , QR மட்டுமே" என்ற புத்தம் புதிய முறையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. 

பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணிகள் மெட்ரோ இரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள க்யூ.ஆர் குறியீட்டை மட்டும் ஸ்கேன் செய்தால் போதுமானது. இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வது மூலம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு வழங்கும் பக்கத்திற்கு செல்லலாம். இந்த பக்கத்தில், பயணிகள் செல்ல வேண்டிய மெட்ரோ இரயில் நிலையத்தையும், பணம் செலுத்தும் முறையையும் தேர்வு செய்யலாம்.


யுபிஐ, இணைய வங்கி, கடன் மற்றும் சேமிப்பு வங்கி போன்ற அனைத்து மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் பயணச்சீட்டு கட்டணத்தைச் செலுத்தலாம். ஆண்ட்ராய்டு கைப்பேசியில் யுபிஐ முறையை தேர்வு செய்தால், கைப்பேசியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அனைத்து யுபிஐ செயலிகளும் வரிசைப்படுத்தப்படும். பயணிகள் இவற்றிலிருந்து ஏதேனும் ஒரு முறையை தேர்வு செய்து தொடர்வதற்கு பாதுகாப்பு கடவுச்சொல்லை மட்டும் உள்ளிட வேண்டும்.

QR டிக்கெட்டுகள் தானாகவே உருவாக்கப்பட்டு கைப்பேசி சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்படும். தற்போது மொபைல் QR டிக்கெட்டில் 20% கட்டண தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கு எப்போதும் சிறந்த மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கி வருகிறது. "இனி வரிசைகள் இல்லை , QR மட்டுமே" என்ற புத்தம் புதிய முறையை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக் இ.ஆ.ப., இன்று கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர்  ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), உயர் அலுவலுர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.