×

தஞ்சையில் பூட்டியிருந்த காருக்குள் இளைஞரின் சடலம் - போலீஸ் விசாரணை

 

தஞ்சை புதிய பேருந்து நிலையம் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில்  அரை நிர்வாண கோலத்தில் இளைஞரின் சடலம் கிடப்பதாக வந்த புகாரை அடுத்து,தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செக்கானூரணியை சேர்ந்த அருண்குமார் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அக்வா டெக் கம்பெனியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5ம் தேதி தனது ஆல்டோ காரை தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு டோக்கன் பெற்றுக் கொண்டு அலுவலகப்  பணி காரணமாக கோவை சென்றார், கோவையில் இருந்து தஞ்சை திரும்பிய அருண்குமார் கார் நிறுத்தத்தில் நிறுத்தி இருந்த கார் கதவை திறந்து உள்ளார். அப்போது ஓட்டுனர் இருக்கையில் 24 வயது உள்ள இளைஞர் அரை நிர்வாண கோலத்தில் வாய், மூக்கில் ரத்தம் வழிந்து அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக கார் நிறுத்தம் வாடகைதாரரிடம் தகவல் கொடுத்தார், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு  தடவியல் நிபுணருடன் வந்த காவல்துறையினர் காரில் இருந்த ஆண் சடலத்தை மீட்டனர். கார் அருகில் தரையில் கிடந்த பிளாஸ்டிக் பையை ஆராய்ந்தபோது அதில் சட்டை, வேஷ்டி மற்றும் செல்போன் இருந்தது. செல்போனில் கடைசியில் அவருக்கு வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு காவல்துறையினர் விசாரித்தபோது, தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. பூட்டிய காருக்குள் மணிகண்டன் எவ்வாறு சடலமானார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்