×

வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து பலி!

 

சென்னை வண்ணாரப்பேட்டை நரசிங்கையர் தெருவை சேர்ந்தவர் செல்வசங்கரி. இவரது மகன் தினேஷ்குமார்(10). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் செல்வசங்கரியும் அதே பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் செல்வசங்கரியின் கணவர் கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இதனால் செல்வசங்கரி தனது குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிறுவன் தினேஷ் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட தாய் செல்வசங்கரி உடனே தினேஷை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து  வண்ணராப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே சிறுவன் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.