×

மதுபோதையில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - 2 பேர் கைது

 

சென்னை எம்.ஜி.ஆர் நகர் சூளைப்பள்ளம் அண்ணா தெருவை சேர்ந்த தம்பதிகளின் 15வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இவரது வீட்டிற்கு எதிரே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வம்(27) கார்த்திக்(21) ஆகிய இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். மாணவி கடந்த ஒரு மாதமாக செல்வத்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல மாணவி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த செல்வம், கார்த்திக் இருவரும் திடீரென மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பி வந்து அழுது கொண்டே நடந்ததை தனது தாயிடம் கூறினார். 

இதையடுத்து தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாய் அசோக் நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்ட செல்வம், கார்த்திக் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.