×

பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

 

சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல்  எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்த சிவகுரு என்பவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அரசகுரு(13).  இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் மாணவன் அரசகுரு,  கடந்த 20 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல்  வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். பெற்றோர் பலமுறை சமாதானம் கூறியும் அரசுகுரு  பள்ளிக்கு செல்ல மாட்டேன் என பிடிவாதமாக இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் திங்கள் கிழமை முதல்  பள்ளிக்கு செல்லவேண்டும்  என்று  பெற்றோர் உறுதியுடன் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.  இதனால்  சோகத்தில் இருந்து வந்த மாணவன் அரச குரு ,    நேற்று நள்ளிரவு  வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று,  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் பெற்றோருக்கு  தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த பெற்றோர் மகனின் உடலைக் கண்டு கதறி அழுதனர் . இதுகுறித்து தகவலறிந்து வந்த  அஸ்தம்பட்டி காவல்துறையினர்,   மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவன் அரசகுரு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பள்ளியில் மாணவனுக்கு ஏதாவது பிரச்சினை இருந்து வந்ததா?  அல்லது வேற ஏதாவது காரணங்கள் உள்ளதா?  என்று பல்வேறு  கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.