×

தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து - 8 மாணவர்கள் படுகாயம்

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று திங்கள் கிழமை என்பதால் வழக்கம் போல் பள்ளிகள் திறந்துள்ள நிலையில், தனியார் பள்ளியை சேர்ந்த வாகனமும், 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்த பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளி வாகனம் கவிழ்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த வாகனத்தில் இருந்த குழந்தைகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேருக்கு அதிகளவில் காயம் ஏற்பட்டதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.