×

"இம்மாத இறுதிக்குள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

 

தேனியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து குமுளியிலும்,தேவதானப்பட்டியிலும் நடந்த முகாம்களை அவர் ஆய்வு செய்தார்.  இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய அலுவலகம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த மாதம் மட்டும் ஒரு கோடியே 42 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த 1.04 கோடியை விட 38 லட்சம் கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் மத்திய அரசு 1.23 கோடி இலக்கு நிர்ணயித்துள்ளது. அதையும் அடைந்துவிடுவோம். கொரோனா மூன்றாவது அலை வரக் கூடாது. 

அப்படியே வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 62 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டால், எந்த அலை வந்தாலும் உயிர்ச்சேதம் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி விடுவோம்” என்றார்.