×

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைய 5.88 லட்சம் பயனாளர்கள் இணைப்பு..!

 

தமிழ்நாடு அரசின் அனைத்து துறை சார்ந்த சேவைகளை பெறுவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரே இடத்தில் பல்வேறு துறைகளின் சேவைகளை மக்கள் எளிதாக பெற முடியும். மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 10,000 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இணைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள், புதிய ரேஷன் அட்டைதாரர்கள் என பலரும் எப்போது இணையலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை பயன்படுத்தி பலரும் இணைந்து வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் படி பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவும் அவர்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்து இருக்க கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் மாதம் தோறும் தமிழ்நாடு அரசு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாயை வரவு வைத்து வருகிறது. இதன் மூலம் பெண்கள் தங்களுடைய குழந்தைகளின் மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவுகளை மேற்கொள்கின்றனர். மேலும் இதனால் கிராமங்களில் பணப்புழக்கமும் அதிகரித்து வருகிறது.

திமுக 2021 சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் நிதி நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதை தொடர்ந்து தள்ளிப் போட்டு வந்தது. பின்னர் ஒரு வழியாக 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் திட்டம் அமலுக்கு வந்தது. இருந்த போதும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் என்று முன்னர் அளித்த வாக்குறுதியிலிருந்து சற்று விலகி தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி இந்த திட்டத்தில் இணைவதற்கு பொருளாதாரத் தகுதிகளை நிர்ணயித்தது. ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு 3600 யூனிட் மின்சாரத்திற்கு குறைவாக பயன்படுத்த வேண்டும், சொந்த பயன்பாட்டிற்கு கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு அறிவித்த பொருளாதார தகுதிகளை பூர்த்தி செய்தவர்கள் கூட திட்டத்தில் புதிதாக இணைய முடியாமல் இருந்தது இந்நிலையில் எப்போது இணைப்பு நடைபெறும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை பயன்படுத்தி பலரும் இணைந்து வருகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பல்வேறு துறைகளில் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5.88 லட்சம் மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைவதற்கானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.